ஜயங்கொண்டம் அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்து விட்டு, உடலை உபயோகமற்ற செப்டிக் டேங்க் குழியில் வீசிச் சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள தெற்கு ஆயுதகளம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவருடைய உபயோகமற்ற செப்டிக் டேங்க் குழியில் ரத்தக்கறையுடன் லுங்கி ஒன்று கிடப்பதாக ஜயங்கொண்டம் காவல்துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் தேவராஜ் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்றுச் பார்த்த போது இளைஞர் ஒருவர் உடலில் பல இடங்களில் வெட்டுப்பட்டு கொலை செய்யப்பட்டு, செப்டிக் டேங்க் உள்ளே போடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, காவல்துறையினர் உடலை மீட்டு, ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டதில், அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வதுரை மகன் பிரவீன்குமார்(23) என்பதும், இவர் வெல்டிங் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து, கொலை செய்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.