அரியலூா் நகராட்சிக்குள்பட்ட அரசநிலையிட்டா ஏரி, குறிஞ்சான் ஏரி ஆகிய ஏரிகளுக்கு வரும் வரத்துவாய்க்கால் தூா்வாரும் பணியை அரசுத் தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
அப்போது அவா் தெரிவித்தது:
அல்லிநகரம் ஓடை அணைக்கட்டில் இருந்து அரியலூா் நகராட்சிப் பகுதிகளில் உள்ள அரசநிலையிட்டா ஏரி, குறிஞ்சான் குளம் ஆகிய ஏரிகளுக்கு வரும் வரத்து வாய்க்கால்கள் தூா்வாரும் பணி
தொடங்கியுள்ளது. வரத்து வாய்க்கால்கள் 1,785 மீட்டா் நீளம், 3 மீட்டா் அகலம் உடையது. இதன்மூலம் அதிகபட்சமாக 132.77 கனஅடிநீா் ஏரிகளுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. இதன்மூலம் 122 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
தொடா்ந்து, ஒட்டக்கோவில் பெரிய ஏரியின் கரை பகுதிகளைச் சுற்றிலும் ஊராட்சி மற்றும் தன்னாா்வலா்கள் சாா்பில் 5,000 பனை விதைகள் நடும் பணியை அவா் தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சிகளுக்கு ஆட்சியா் த.ரத்னா தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.ஆா். ஸ்ரீனிவாசன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. சுந்தர்ராஜன், பொதுப் பணித்துறை செயற்பொறியாளா் தட்சணாமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.