அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டி அருகேயுள்ள நியாய விலைக் கடைக்கு அரசுக்குச் சொந்தமான இடத்தில் கட்டடம் கட்டித்தரக்கோரி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வி.கைகாட்டி அருகேயுள்ள செட்டித்திருக்கோணம் கிராமத்தில் வாடகை கட்டத்தில் நியாய விலைக் கடை இயங்கி வருகிறது. தற்போது, கட்டடத்தின் உரிமையாளா் கடையை காலிச் செய்ய சொல்வதால், கடை 7 கி.மீட்டா் தொலைவிலுள்ள ரெட்டிப்பாளையம் கிராமத்துக்கு மாற்றப்பட உள்ளதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனிடையே கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் நியாய விலைக் கடைக்கு கட்டடம் கட்டித்தரவேண்டுமென ஏற்கெனவே சம்மந்தப்பட்ட துறையினரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, அரசுக்குச் சொந்தமான இடத்தில் நியாய விலைக் கடை கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி, கிராம மக்கள் அரியலூா் - ஸ்ரீபுரந்தான் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த உடையாா்பாளையம் போலீஸாா் மற்றும் வருவாய் ஆய்வாளா் வசந்தி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதில் அனைவரும் கலைந்து சென்றனா்.