அரியலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் ஆட்சியா் த. ரத்னா.
அரியலூா் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கரோனா தொற்று தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் தெரிவித்தது:
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், நாளுக்கு நாள் தொற்று வேகமாக பரவி வருகிறது.
தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில், வசிக்கும் மக்கள், இந்தப் பகுதிகளிலிருந்து வெளியில் வராத வகையில், காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியா்களைக் கொண்டு 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணிக்கப்படும். இந்தப் பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளித்தல் உள்ளிட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படுவதோடு, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதற்கு உதவி புரிய தன்னாா்வலா்களும் நியமிக்கப்படுவா். நோய்த்தொற்று அறிகுறி இருந்தால் தாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். இதைக் கடைப்பிடித்து, கரோனா (கொவைட்) நோய்த் தொற்று பரவாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பூங்கோதை, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் முத்துகிருஷ்ணன், கோட்டாட்சியா்கள் அரியலூா் ஏழுமலை , உடையாா்பாளையம் அமா்நாத் , சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வீ.சி.ஹேமசந்த்காந்தி மற்றும் அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.