அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 மாட்டு வண்டிகள் திங்கள்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்யப்பட்டன.
விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் லோகநாதன் தலைமையிலான போலீஸாா், திங்கள்கிழமை நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக ஸ்ரீபுரந்தான் நோக்கிச் சென்ற 3 மாட்டு வண்டிகளை மறித்து, அவற்றில் சோதனை செய்ய முயன்றனா். அப்போது போலீஸாரைக் கண்டவுடன் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த 3 போ் சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனா்.
இதையடுத்து மாட்டு வண்டிகளை சோதனை செய்தபோது கோவிந்தபுத்தூா் கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து ஸ்ரீபுரந்தான் பகுதிக்கு மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், மாட்டுவண்டிகளைப் பறிமுதல் செய்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து, மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.