முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
அரியலூர் அருகே ஆதிதிராவிடர்களுக்கு நிலம் தர மறுப்பு: 4 பெண்கள் உள்பட 5 பேர் தீக்குளிக்க முயற்சி
By DIN | Published On : 28th August 2021 05:12 PM | Last Updated : 28th August 2021 05:12 PM | அ+அ அ- |

ஆதிச்சனூர் கிராமத்தில் இடம் அளவீடு செய்தபோது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார்.
அரியலூர் மாவட்டம், ஆதிச்சனூர் கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கு நிலம் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்து, இடத்தின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் உள்பட 5 பேர் சனிக்கிழமை தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உடையார்பாளையம் அருகேயுள்ள ஆதிச்சனூர் கிராமத்திலுள்ள 4 நபர்களிடமிருந்து, சுமார் இரண்டரை ஏக்கர் இடத்தினை கடந்த 1996 ஆம் ஆண்டு அரசு விலைக்கு வாங்கியது. இடத்துக்கான தொகையை உரிமையாளர்களின் வங்கி கணக்கில் அரசு செலுத்தியுள்ளது. தொடர்ந்து, அந்த இடத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமுதாய மக்கள் 66 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
இதையும் படிக்க- விவசாய சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம்: இந்தியக் கம்யூ. வரவேற்பு
ஆனால், இடத்தினை தரமுடியாது என இடத்தின் உரிமையாளர்கள் 2 முறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருமுறையும் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை இடத்தினை அளவீடு செய்து, ஆதிதிராவிடமக்களுக்கு வழங்க காவல்துறையினருடன், வருவாய்த்துறையினர் ஆதிச்சனூர் கிராமத்துக்கு சென்றனர். அங்கு கிராமம் முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, இடம் அளவீடு செய்யும் பணி தொடங்கியது.
அப்போது, இடத்தின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களான செல்வம்(28), பிரியா(32), மேகலா(35), மீனாட்சி(30), வேம்பு(45) ஆகியோர் நிலத்தை அளவீடு செய்யக்கூடாது. அரசு வழங்கிய தொகை குறைவாக உள்ளது. தற்போது உள்ள மதிப்பீட்டை கணக்கிட்டு பணம் தரவேண்டும் எனக்கூறி தங்களது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தனர்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் அந்த 5 நபர்களின் மீதும் தண்ணீரை ஊற்றி, அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, உரிய பாதுகாப்புடன் இடத்தினை வருவாய்த்துறையினர் அளவீடு செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.