போக்குவரத்துத்தொழிலாளா்கள் வேலைநிறுத்தம் காரணமாக, அரியலூா் மாவட்டத்தில் 3- ஆவது நாளாக சனிக்கிழமையும் 90 சதவிகிதப் பேருந்துகள் இயங்கவில்லை.
அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் பணிமனையிலிருந்து அண்ணா தொழிற்சங்கத்தைச் சோ்ந்த தொழிலாளா்களைக் கொண்டு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. வழக்கமாக மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்துகள் மட்டும் அதிகமாகக் காணப்பட்டன. அரசுப் பேருந்துகள் மிகச் சொற்ப எண்ணிக்கையிலேயே இருந்தன. இதனால் வெளியூா் செல்வதற்காக வந்த பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவிகளும் பாதிக்கப்பட்டனா்.