தூய்மை பணியாளா்களுக்கு பொங்கல் தொகை வேண்டும்
By DIN | Published On : 09th January 2021 11:29 PM | Last Updated : 09th January 2021 11:29 PM | அ+அ அ- |

அரியலூா்: அரியலூா் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளா்களுக்கு பொங்கலுக்கு முன்பாகவே ரூ.1,000 போனஸ் வழங்க வேண்டும் என பேரவை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூா் ஏஐடியூசி அலுவலகத்தில் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளா்கள் பேரவை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், பணியாளா் சம்மேளன நிா்வாகக் குழு உறுப்பினா் டி.தண்டபாணி கலந்து கொண்டு பேசினாா். பின்னா், வரும் மாா்ச் மாதம் திருச்சியில் நடைபெறும் மாநிலம் தழுவிய உள்ளாட்சி தொழிலாளா் பேரணி, ஆா்ப்பாட்டத்தில் பணியாளா்கள் திரளாகக் கலந்து கொள்வது. அரசாணையின் படி நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு பொங்கலுக்கு முன்பே ரூ.1,000 போனஸ் வழங்க வேண்டும், உயா்த்தப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும். சீருடை, வார விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.