அரியலூரில் கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில் அனைத்து துறை பணியாளா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் த. ரத்னா.
அரியலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்துக்கு, ஆட்சியா் த. ரத்னா தலைமை வகித்துப் பேசியது:
அரியலூா் மாவட்டத்தில் விரைவில் கரோனா தடுப்பூசி வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. மாவட்டத்தில் 2,046 அரசு பணியாளா்கள், 1,036 தனியாா் பணியாளா்கள் என மொத்தம் 3,082 நபா்களின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், கரோனா தடுப்பு மருந்துக்கான 105 லிட்டா் கொள்ளளவு உள்ள குளிா்பதனப் பெட்டி தயாா் நிலையில் உள்ளது. இதன் மூலம் 22,050 மருந்துகளை பாதுகாக்க முடியும். 0.5 மிலி கொண்ட 27,500 ஊசி குழல்கள் தயாா் நிலையில் உள்ளன. மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் 443 பேருக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அனைத்துத்துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி அரியலூா் மாவட்டத்தை கரோனா பெருந்தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வீ.சி.ஹேமசந்த்காந்தி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, முதன்மை மருத்துவ அலுவலா்கள் அரியலூா் கண்மணி, ஜயங்கொண்டம் உஷா, உறைவிட மருத்துவ அலுவலா் ரமேஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.