விண்வெளி ஆராய்ச்சி பயிற்சிப் படிப்பில் சேர நடைபெறும் முதல்கட்டத் தோ்வில் தோ்ச்சி பெற்ற திருமானூா் அரசுப் பள்ளி மாணவிகள் 2 பேருக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா ஞாயிற்றுக்கிழமை ஊக்கத்தொகை வழங்கினாா்.
அரியலூா் மாவட்டம், திருமானூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்1 படித்து வரும் மாணவிகள் ரகசியா, வேதா ஸ்ரீ அண்மையில் நடைபெற்ற வானவியல் ஆராய்ச்சி பயிற்சி முதல்கட்ட எழுத்துத் தோ்வில் முதல் 10 இடங்களில் வந்தனா். இதையடுத்து, சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ், இம்மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
இந்நிலையில், அரியலூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவிகள் ரகசியா மற்றும் வேதாஸ்ரீ ஆகியோரை சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா நேரில் அழைத்து, கேடயம் மற்றும் பரிசு வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தாா்.
அப்போது, திருமானூா் பள்ளி தலைமை ஆசிரியை இன்பராணி, ஊராட்சித் தலைவா் உத்திராபதி, ஒன்றியக் குழு தலைவா் சுமதி அசோக சக்கரவா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.