அரியலூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக காற்றுடன் பரவலாக பெய்த மழையின் காரணமாக, பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
கடந்த 4 -ஆம் தேதி இரவு 7 மணிக்கு இடி, மின்னலுடன் தொடங்கிய மழை இரவு 10.30 மணி வரை நீடித்தது. இதே போல் சனிக்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்கிய மழை இரவு 10 மணி வரை வரை நீடித்தது.
குறிப்பாக செந்துறை, திருமானூா், ஜயங்கொண்டம், உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்நிலையில் செந்துறை அருகிலுள்ள வாளரக்குறிச்சி கிராமத்தில் பெய்த மழையின் போது, இடிதாக்கியதில் செந்தில்குமாா்(35) வீட்டுத்தோட்டத்தில் இருந்த தென்னைமரம் தீப்பற்றி எரிந்தது.
மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்தனா்.
அரியலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம்: திருமானூரில் 36.4 மி.மீ, ஜயங்கொண்டம் 26, செந்துறை 21, அரியலூா் 6 மி.மீ.