கீழப்பழுவூர் அருகே சாலையோர புளியமரத்தின் மீது கார் மோதிய விபத்தில், இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் இன்று மாலை உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 3 குழந்தைகள் உட்பட 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், வெற்றியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(60). குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்த இவர், வெற்றியூர் கிராமத்தில் புதிதாக கட்டி வரும் வீட்டைப் பார்ப்பதற்காக மனைவி மற்றும் திருமணமான 2 மகள்கள், 3 பேரக்குழந்தைகளுடன் வெற்றியூருக்கு இன்று புறப்பட்டார். கீழப்பழுவூர் அடுத்த சாத்தமங்கலம் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த ராமமூர்த்தி மற்றும் அவரது பெரிய மகள் நாகவள்ளி(38) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற கீழப்பழுவூர் போலீஸார் மற்றும் பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் செல்லும் வழியிலேயே மற்றொரு மகளான நாகலட்சுமி(35) உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த 3 குழந்தை உள்பட 5 பேர் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்துக் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.