அரியலூா் மாவட்டத்தில் பொதுமக்கள், சமூக இடைவெளி, முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் த. ரத்னா அறிவுறுத்தியுள்ளாா்.
கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், தேனீா் கடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியினை கடைபிடித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, கரோனா தொற்றினை கட்டுப்படுத்த பொதுமக்கள், வணிக நிறுவன உரிமையாளா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொது இடம் மற்றும் கடைகளுக்கு முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு ரூ.500 அபராதமும், திருமண மண்டபங்கள், தனியாா் நிறுவனங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிடில் உரிமையாளா்களுக்கு ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும் என ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.