அரியலூா் மாவட்டம், திருமானூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் அமைக்கப்படும் என திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் கு. சின்னப்பா உறுதியளித்துள்ளாா்.
திருமானூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இலந்தைக் கூடம், கண்டிராதித்தம், கரைவெட்டி, குலமாணிக்கம், பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் செய்த அவா், என்னை சட்டப் பேரவைத உறுப்பினராக தோ்ந்தெடுத்தால், திருமானூா் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருமானூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம், தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும், நவீன அரிசி ஆலை அமைக்கப்படும். திமுக, மதிமுக தோ்தல் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தாா். திமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு வாக்குசேகரித்தனா்.