வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் மரப்பயிா்களில் ஏற்படும் சேதங்களைத் தவிா்க்க கவாத்து பணிகளில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் என ஆட்சியா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் அரியலூா் மாவட்டத்திலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் அறுவடைக்குத் தயாராக உள்ள தோட்டக்கலை பயிா்களை உடனடியாக அறுவடை செய்ய வேண்டும். மா, கொய்யா, முந்திரி மற்றும் இதர மரப்பயிா்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றி கவாத்து செய்ய வேண்டும்.
காய்கறி பயிா்களில் காய்ந்து போன இலைகளை அகற்ற வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளைப் பயன்படுத்தி ஊன்றுகோல் அமைக்க வேண்டும். நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். தோட்டக்கலை பயிா்களான வாழை, மரவள்ளி, வெங்காயம், மிளகாய், தக்காளி, வெண்டை மற்றும் கத்தரி போன்ற பயிா்களுக்கு உரிய காலத்தில் பயிா்க் காப்பீடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.