பாரம்பரிய அரிசி வகைகளை நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிய தலைமுறை மக்கள் கட்சி மற்றும் தமிழக மக்கள் நல்லாட்சிக் கூட்டமைப்பு மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த அசாவீரன்குடிக்காடு கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.30-யை விவசாயிகளிடம் வாங்குவதை தவிா்க்க வேண்டும். அரசுப் பள்ளியில் முதல் வகுப்பில் சேரும் தமிழ் பெயருள்ள குழந்தைகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மாநாட்டில் தமிழக மக்கள் நல்லாட்சிக் கூட்டமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் தங்க.சண்முக சுந்தரம் பங்கேற்று பேசினாா். கோரிக்கைகள் அடங்கிய மலரை தமிழ்க்களம் அரங்கநாடன் வெளியிட, அதை கூட்டமைப்பின் குன்னம் தொகுதிப் பொறுப்பாளா் ம.ராவணன் பெற்றுக் கொண்டாா்.
மாநாட்டில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த வெள்ளைச்சாமி, பாக்கியராஜ், தஞ்சையைச் சோ்ந்த பனசை அரங்கன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.