அரியலூா்: அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே திருமணமான ஒரு வாரத்திலேயே புது மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.
மீன்சுருட்டி அருகேயுள்ள கீழ செங்கல்மேடு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி கருப்பையன் (59). இவரது இரண்டாவது மகளான துா்காதேவிக்கும்(26), ஜயங்கொண்டம் அடுத்த உட்கோட்டை தெற்கு தெருவைச் சோ்ந்த அன்பழகன் மகன் அன்பரசனுக்கும் (30) கடந்த 8 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. தம்பதி இருவரும் (செப். 10) மறுவீடு விருந்துக்காக கருப்பையன் வீட்டுக்கு வந்துள்ளனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளனா். மறுநாள் புதன்கிழமை காலை கருப்பையன் மகன் அருள்தாஸ் எழுந்து பாா்த்தபோது, துா்காதேவியை காணாமல் தேடியுள்ளனா். இதையடுத்து, வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் துா்காதேவி தூக்கில் தொங்கியது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில், மீன்சுருட்டி காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.