அரியலூா் ஏரிகளின் கரைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் அகற்றப்பட்டன.
அரியலூா் நகரில் உள்ள குறிஞ்சான்குளம் மற்றும் அரசநிலையிட்டான் ஏரிக்கரைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 125 வீடுகள் இடிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 95 வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், மீதிமுள்ள வீடுகள் இடிக்கும் பணி 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது. இதில், வட்டாட்சியா் ராஜமூா்த்தி தலைமையில்,100-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் பாதுகாப்புடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, மின்சாரம் மற்றும் பொதுப்பணித் துறை, வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.