அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம்-2 செயலாக்கக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டங்களுக்கு ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தலைமை வகித்துப் பேசுகையில், ஆண்டிமடம் ஒன்றியத்தில் கூவத்தூா், இலையூா், அழகாபுரம், சிலம்பூா், ஆண்டிமடம், விளந்தை, பெரியகிருஷ்ணாபுரம், ஜயங்கொண்டம் ஒன்றியத்தில் எரவாங்குடி, காட்டகரம், தத்தனூா், முத்துசோ்வாமடம், தழுதாழைமேடு, கங்கைகொண்டசோழபுரம், குண்டவெளி, செந்துறை ஒன்றியத்தில் ஆலத்தியூா், அசாவீரன்குடிகாடு, மணப்பத்தூா், மணக்குடையான், தளவாய் ஆகிய ஊராட்சிகளில் குறைந்த பட்ச அடிப்படை நிதியாக தலா ரூ.30 லட்சம் வழங்கப்படும்.
மேலும், செயல்திறன் ஊக்க நிதியாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். இந்த ஊராட்சிகளில் தெருக்கள், வீதிகள் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், சமத்துவ சுடுகாடு, இடுகாடு என்று பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளுதல் போன்ற திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், செயற்பொறியாளா் ராஜராஜன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் ஆண்டிமடம் மருதமுத்து, செந்துறை தேன்மொழி சாமிதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.