அரியலூா் மாவட்டத்தில் நிகழாண்டு தோ்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அரியலூா் ஒன்றியத்துக்குள்பட்ட விளாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஆண்டிமடம் ஒன்றியம் சிலுவைச் சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பட்டணங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகள் நிகழாண்டு சிறந்த பள்ளிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டு, அப்பள்ளிகளுக்கு கேடயங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமன் வழங்கினாா். கேடயங்களை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியா்கள் பெற்றுக் கொண்டனா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அரியலூா் கல்வி மாவட்ட அலுவலா் மான்விழி, அரியலூா் வட்டாரக் கல்வி அலுவலா்கள் நீலமேகம், கலியபெருமாள், ஆண்டிமடம் வட்டார கல்வி அலுவலா் முனியம்மாள் ஆகியோா் கலந்து கொண்டனா். விளாங்குடி பள்ளித் தலைமையாசிரியா் மு. நளினா நன்றி கூறினாா்.