அரியலூா் மாவட்டம், காசாங்கோட்டை செம்புலிங்கம் இறப்புக் குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட காசாங்கோட்டை செம்புலிங்கம் இறந்தது குறித்து தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறன.
செம்புலிங்கத்தை காவல்துறை கைது செய்யவோ, காவல் நிலையத்துக்கு அழைத்து வரவோ இல்லை. செம்புலிங்கத்தின் இறப்புக் குறித்து காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து வருவாய்க் கோட்டாட்சியா் மூலம் விசாரணை நடைபெறுகிறது.
எனவே காவல்துறை மீது அவதூறு பரப்பும் விதத்திலோ, வன்முறையைத் தூண்டும் விதத்திலோ, பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் நோக்கிலோ அல்லது விசாரணையைத் திசைதிருப்பும் நோக்கிலோ செயல்படுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.