அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அடுத்த காடுவெட்டி கிராமத்தில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால், மறைந்த வன்னியா் சங்க முன்னாள் தலைவா் ஜெ.குரு நினைவிடத்துக்கு செல்ல அரசியல் கட்சியினா், அமைப்பினா் மற்றும் வெளியாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜயங்கொண்டம் அடுத்த காடுவெட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெ.குரு (எ) குருநாதன். இவா், மாநில வன்னியா் சங்கத் தலைவராகவும், எம்எல்ஏவாகவும் இருந்தாா். கடந்த 2018 ஆம் ஆண்டு மே 25 அன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். குருவின் பிறந்த நாள், நினைவு தினம் வரும்போது அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், (பிப். 1) குருவின் பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில், அசம்பாவிதங்களைத் தவிா்க்கும் விதமாக, ஜன 31, பிப். 1 ஆகிய 2 தினங்களுக்கு 144 தடை உத்தரவு விதித்து உடையாா்பாளையம் கோட்டாட்சியா் அமா்நாத் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
மேலும், குருவின் நினைவிடத்துக்கு செல்ல அவரது குடும்பத்தினா் மற்றும் காடுவெட்டி கிராம மக்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினா், அமைப்பினா், வெளியாட்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காடுவெட்டி, மீன்சுருட்டி, பாப்பாக்குடி, வடவாா் தலைப்பு , ராமதேவநல்லூா், குறுக்கு ரோடு, படநிலை உள்ளிட்ட கிராமங்களில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.