அரியலூர், ஜயங்கொண்டம் உடையார்பாளையம், வரதராசன்பேட்டை ஆகிய பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் அரியலூர் நகராட்சியில் 34 வாக்கு மையங்களில் 164 அலுவலர்களும், ஜயங்கொண்டம் நகராட்சியில் 38 வாக்கு மையங்களில் 184 அலுவலர்களும், உடையார்பாளையம் பேரூரட்சியில் 15 வாக்கு மையங்களில் 68 அலுவலர்களும், வரதராசன்பேட்டை பேரூராட்சியில் 15 வாக்கு மையங்களில் 72 அலுவலர்களும் என மொத்தம் 488 அலுவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பதற்றமான வாக்கு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினருடன், ஊர்காவல் படையினரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், வருவாய்த் துறை, காவல்துறையினர் ஒருங்கிணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான ஜெனரேட்டர் இயந்திரங்களும், பழுது ஏற்படும் இயந்திரங்களுக்கு மாற்றாகத் தேவைப்படும் கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த காவல் துறையினர் பாதுகாப்புடன் அந்தந்த நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வரப்பட்டு சீல் வைக்கப்படுகிறது.
அங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்.22 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப் பதிவின்போது, கரோனா தொற்று உள்ளவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தொற்று உள்ளவர்கள் வாக்களிக்க வந்தால், அவர்கள் பயன்படுத்துவதற்காக கவச உடை உள்ளிட்டவை அடங்கிய "கரோனா கிட் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலுள்ள மையத்தில், வாக்களிப்பதற்காக வரிசை நிற்கும் பெண்கள்.