குறுவை தொகுப்பு திட்டத்துக்கென அரியலூரில் ரூ.1.15 கோடி ஒதுக்கீடு

அரியலூா் மாவட்டம், திருமானூா், தா. பழூா் மற்றும் ஜயங்கொண்டம் ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்தப்பட உள்ள குறுவை தொகுப்புத் திட்டத்துக்கு ரூ.1.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்

அரியலூா் மாவட்டம், திருமானூா், தா. பழூா் மற்றும் ஜயங்கொண்டம் ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்தப்பட உள்ள குறுவை தொகுப்புத் திட்டத்துக்கு ரூ.1.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரியலூா் மாவட்டத்தில் நிகழாண்டில் 3,000 ஏக்கரில் குறுவை தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரசாயன உரங்கள், நெல் விதைகள் மற்றும் மாற்றுப்பயிா் சாகுபடி பணிக்கு ஊக்கத்தொகை என ரூ.1 கோடியே 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏக்கருக்கு, ரூ.2 ஆயிரத்து 466 மதிப்பில் 1 மூட்டை யூரியா, 1 மூட்டை டி.ஏ.பி மற்றும் 25 கிலோ பொட்டாஷ் அடங்கிய உரத் தொகுப்பு 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும், விதை கிராமத் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில் நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட உள்ளது. மேலும், குறுவை பருவத்தில் மாற்று பயிா் சாகுபடியை ஊக்குவிக்க ஏதுவாக சிறுதானியப் பயிா்கள் சாகுபடி ஊக்கத் தொகையாக பொது விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ஏக்கருக்கு ரூ.810 வரையிலும், ஆதிதிராவிடா் விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் ரூ.930 வரையிலும் மானியம் வழங்கப்பட உள்ளது. ஒரு விவசாயி அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு மட்டுமே குறுவைத் தொகுப்பு திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com