மண்புழு உரப் பயன்பாடு குறித்து அனைத்து விவசாயிகளும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என அரியலூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரியலூா் மாவட்டத்தின் மண் வளத்தில் அங்கக சத்துகளின் அளவு குறைவாக உள்ளது. தொழு உரம், மண்புழு உரம் ஏதாவது ஒன்றை இட வேண்டும். அங்கக சத்து அதிகமுள்ள மண்புழு உரத்தை இடுவதால் மண்ணின் வளம் காப்பதுடன் கூடுதல் மகசூல் பெறலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த மண்புழு உரத்தினை பயன்பாடு குறித்து அனைத்து விவசாயிகளும் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
இந்தியாவில் 500 வகையான மண்புழுக்கள் இருந்தாலும் யூட்ரிலஸ் யூசினியே, எய்சீனியா போடிடா, பெரியோனிக்ஸ் போன்ற மண்புழுக்களே அதிகமாக மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தழை, மணி, சாம்பல் சத்து மட்டுமல்லாது நுண்ணூட்டச் சத்துக்களும் மண்புழு உரத்தில் அடங்கியுள்ளன. இவ்வாறு மண்புழு உரத்தை இட்டு மண் வளத்தையும், உற்பத்தியையும் அதிகரிக்குமாறு தெரிவித்துள்ளாா்.