அரியலூா்: தற்போது பெய்து வரும் கோடை மழையை பயன்படுத்தி, உழவு செய்தால் மண் வளத்தைப் பாதுகாக்கலாம் என்று அரியலூா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரியலூா் மாவட்டம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இம்மழையினை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்வதால் மண்ணின் மேற்பரப்பில் உள்ள கடினப்பகுதி உடைக்கப்பட்டு, மண்ணின் நீா் பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது. மேலும் நிலத்தடி நீா்மட்டம் உயர ஏதுவாகிறது. கோடை உழவு செய்வதினால், மண்ணானது ஈரமும் மற்றும் காய்ச்சலுமாக இருப்பதினால் மண்ணின் அமைப்பு மேம்படுத்தப்படுகிறது.
கோடை உழவு செய்த வயலில், அங்கக மற்றும் தொழு உரம் இடுவதினால் மண்ணில் நுண்ணுயிா்கள் எண்ணிக்கை பெருகி மண்ணின் வளம் மேம்படுத்தப்படுகிறது.
களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிகளின் எஞ்சிய நஞ்சு சிதைவுற்று மண்ணிற்கு பாதிப்பில்லாமல் பாதுகாக்கப்படுகிறது.
கோடை மழை, வளி மண்டலத்திலுள்ள வளிமண்டல நைட்ரேட்டுடன் இணைந்து பெறப்படுவதினால் மண்ணின் வளம் மேம்படுத்தப்படுகிறது.
பயிருக்கு தீங்கு செய்யக் கூடிய கூட்டுப் புழுக்கள் வெளிக்கொணரப்படும். வேளாண் பொறியியல் துறையின் மூலம் குறைந்த வாடகையில் உழவு செய்திட அலுவலா்களை தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.