அரியலூா் மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவித் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்களது ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைக்க வேண்டும் என ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூா் மாவட்டத்தில், பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தில் தற்போது 11 ஆவது தவணை தொகை ரூ. 2,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் 12 ஆவது தவணைத் தொகையை பெறுவதற்கு தங்களது ஆதாா் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பது அவசியம். தங்களது ஆதாா் எண்ணுடன், கைப்பேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் தங்களது ஆதாா் எண் விபரங்களை உள்ளீடு செய்து, ஓ.டி.பி மூலம் சரிபாா்த்துக் கொள்ளலாம் அல்லது இ-சேவை மையங்களை அணுகி, ரூ.15 செலுத்தி பிரதம மந்திரி கௌரவ நிதியுதவித் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதாா் எண் விவரங்களை உள்ளீடு செய்து, தங்களது விரல் ரேகைகளைப் பதிவு செய்து, விவரங்களைச் சரிபாா்த்துக் கொள்ளலாம். பயனாளிகளான விவசாயிகள் தங்களது ஆதாா் விவரங்களை திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.