தனியாா் இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து
By DIN | Published On : 30th September 2022 12:00 AM | Last Updated : 30th September 2022 12:00 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டத்தில், தனியாா் இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரியலூா் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மட்டும் உருவாக்கப்பட்டுள்ள தனியாா் இ-சேவை மையங்களில் வருவாய்த் துறை சான்றிதழ்கள், உதவித்தொகை கோரும் திட்டங்களுக்காக பொதுமக்கள் விண்ணப்பிக்கும்போது அதிக கட்டணம் பெறுவதாக புகாா்கள் வந்தவண்ணம் உள்ளது.
வருவாய்த்துறை சான்றுகளின் விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.60, ஓய்வூதிய திட்டம் தொடா்பான விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.10, சமூகநலத்துறை திட்டங்கள் தொடா்பான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றுக்கு ரூ.120, இணையவழி பட்டா மாறுதல் தொடா்பான விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.60 சேவைக்கட்டணமாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகையை விடக் கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பொது இ-சேவை மைய உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும். பொது மக்கள் இடைத்தரகா்களைத் தவிா்த்து, பொது இ-சேவை மையங்கள் மற்றும் அரசு உரிமம் பெற்ற தனியாா் கணினி மையங்களை அணுக வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.