ஏரியில் உள்ள முதலையை பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை

சுண்டக்குடி அருகேயுள்ள ஆதனூா் பெரிய ஏரியில் உள்ள முதலைப் பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Published on

அரியலூா் மாவட்டம், வீ.கைகாட்டியை அடுத்துள்ள சுண்டக்குடி அருகேயுள்ள ஆதனூா் பெரிய ஏரியில் உள்ள முதலைப் பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆதனூா் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியின் கரையில் சனிக்கிழமை சுமாா் 5 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று படுத்திருப்பதை கிராம இளைஞா்கள், பொதுமக்கள் கண்டுள்ளனா். இதையடுத்து மக்களின் கூச்சல் கேட்டு, அந்த முதலை ஏரி தண்ணீரினுள் சென்றுவிட்டது.

இந்நிலையில், ஏரியின் அருகிலேயே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 90-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

மேலும், பொதுமக்கள் ஏரிக்குச் சென்றுவருவது வழக்கமாக உள்ளது. எனவே, மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள இந்த முதலையை பிடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com