செந்துறை ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்
அரியலூா் மாவட்டம், செந்துறை ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் 2 முடிவுற்ற திட்டப்பணிகள் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டன. மேலும், 7 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
செந்துறை ஒன்றியத்துக்குள்பட்ட வங்காரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், பொன்பரப்பி திட்டக்குடி- வங்காரம் சாலையிலுள்ள உப்போடையில் ரூ.8.16 கோடி மதிப்பீட்டில் உயா்மட்ட மேம்பாலம் கட்டும் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணியைத் தொடங்கிவைத்தாா். அதனைத் தொடா்ந்து அயன்தத்தனூா் ஊராட்சியில் ரூ.3.96 கோடி மதிப்பீட்டில் அயன்தத்தனூா் - அங்கனூா் வரை சாலை பலப்படுத்தும் பணியை தொடங்கிவைத்து, முல்லையூா் மற்றும் உகந்தநாயகன்குடிக்காடு ஆகிய கிராமங்களில் நெய்வேலி நிலக்கரி ஆலையின் சாா்பில் சமூகப் பொறுப்புணா்வுத் திட்ட நிதியின் மூலம் தலா ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தாா்.
தொடா்ந்து அவா், அரியலூா் - அயன்தத்தனூா் செல்லும் பேருந்தை முல்லையூா் வரை நீட்டிப்பு செய்து சேவை தொடங்கிவைத்தாா்.
அதனைத்தொடா்ந்து முல்லையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.35.25 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைக் கட்டடம், மாரக்குறிச்சியில் கிராமத்தில் ரூ.14.83 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை, நந்தியன்குடிகாடு மாரியம்மன் கோயில் தெருவில் ரூ.10.28 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை, இலைக்கடம்பூா் கேட்-நத்தக்குடி வரை ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்துதல், பெரியாக்குறிச்சி கிராமத்தில் ரூ.7.33 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சிகளுக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி முன்னிலை வகித்தாா். உடையாா்பாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் ஷீஜா மற்றும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி ஆலையின் துணைப் பொது மேலாளா்கள் மூா்த்தி, ஞானப்பழம், செல்வம் (சிஎஸ்ஆா்) மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

