கரூர் மாவட்டம், கொசூர் ஊராட்சி, நாசிப்பட்டி குளத்தை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் தூர்வாரும் பணியை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கிவைத்தார்.
கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக, குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் ராமர் சொந்த நிதியின் கீழ் தோகைமலை ஒன்றியம், நாகனூர் ஊராட்சிக்கு உட்பட்ட 1000 ஏக்கர் புஞ்சை மற்றும் நஞ்சை நிலங்களுக்கு பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்த அழகன்கவுண்டன்குளத்தை தூர்வாரும் பணியை ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, கொசூர் ஊராட்சிப் பகுதியில் சுமார் 50 ஏக்கர் கிணற்றுப்பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்த நாசிப்பட்டி குளத்தை பொக்லைன் இயந்திரத்தை இயக்கி தூர்வாரும் பணியை தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து, உடல்நலம் குன்றிய கரூர் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கேவி. ராமசாமி, மாநில நெசவாளர் அணிச் செயலாளர் பரமத்தி சண்முகம் ஆகியோர் வீடுகளுக்குச் சென்று அவர்களிடம் உடல்நலம் விசாரித்த ஸ்டாலின், பிறகு, கட்சிப் பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு காரில் சென்னை புறப்பட்டார்.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, ம. சின்னசாமி, குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் ராமர், கரூர் மாவட்ட திமுக செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.