அமராவதியில் மணல்குவாரி அமைப்பதற்கான அரசாணையை திரும்பப் பெறக்கோரி உண்ணாவிரதம் மற்றும் தெருமுனைப் பிரசாரத்தை நடத்துவதென அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.
கரூரில் அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கலந்தாய்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு
சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தலைவர் கே.ராமசாமி தலைமை வகித்தார்.சாமானிய மக்கள் கட்சியின் பொதுச்செயலர் குணசேகரன், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாவட்டச் செயலர் ஷேக்இஸ்மாயில், ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலர் ரா.முல்லையரசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ம.தென்னரசு வரவேற்று பேசினார்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றில் மேலப்பாளையம், கோயம்பள்ளி, புலியூர்,பஞ்சமாதேவி, பள்ளப்பாளையம் போன்ற பகுதிகளில் புதிய மணல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த அரசாணையைத் திரும்பப் பெறக்கோரி உண்ணாவிரதம், ஆற்றில்மணல் அள்ளுவதால் இன்னல்கள் குறித்து மக்களிடையே தெருமுனை பிரசாரம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தந்தை பெரியார் திக மாவட்டத்தலைவர் தனபால் மற்றும் பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.