கருப்பத்தூர் ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற முகூர்த்தக் கால் நடும் விழாவில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே உள்ள கருப்பத்தூரில் காவிரி கரையோரம் ஸ்ரீலஸ்ரீ விமோசனாந்தா குருமகராஜின் முயற்சியால் 1965-இல் ஐயப்பன் கோயில் அமைக்கப்பட்டது. இந்தக் கோயில்தான் தமிழகத்தின் முதல் ஐயப்பன் கோயில் என்றழைக்கப்படுகிறது.
இந்தக் கோயிலில் சிற்ப சாஸ்திர முறைப்படி ஐயப்பனுக்கு புதிதாக கருங்கல் கருவறையும், ஸ்ரீ கன்னிமூல கணபதி, ஸ்ரீமஞ்சமாதா ஆகிய சன்னதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் திருப்பணிகள் முடிந்து வரும் 28-ஆம் தேதி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதனைத்தொடர்ந்து முகூர்த்தக்கால் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில், ஐயப்பன் கோயில் அறக்கட்டளை தலைவர் கருப்பத்தூர் சுந்தரேசன், செயலாளர் லட்சுமிநரசிம்மன், திருப்பணி கமிட்டித் தலைவர் சிவசங்கர், துணைத் தலைவர்கள் ராஜப்பா, செந்தில்குமார், துணைச் செயலாளர் ரெங்கராஜ் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.