ஜன.26-இல் அகில இந்திய கபடிப் போட்டிகள் தொடக்கம்: நியூ கபடி பெடரேசன் ஆப் இந்தியா தலைவர்
ஜனவரி 26-இல் அகில இந்திய அளவிலான கபடி போட்டிகள் தொடங்க உள்ளதாக நியூ கபடி பெடரேசன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் பிரசாத் பாபு தெரிவித்தார்.
கரூரில் அவ்வமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது:
அகில இந்திய அளவில் கிராமங்களில் சிறந்து விளங்கும் கபடி வீரர்களை வெளி உலகிற்கு கொண்டுவரும் வகையில் இந்த புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. எங்களது அமைப்பின் சார்பில் வரும் ஜனவரி 26-இல் அகில இந்திய அளவிலான கபடி போட்டி நடைபெற உள்ளது. இதற்கான வீரர்களைத் தேர்வு செய்ய அண்மையில் இணைய தளத்தில் வெளியிட்டிருந்தோம். அதன்படி தற்போது 3,000 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் இருந்து 8 அணிகளை தேர்வு செய்ய உள்ளோம். இந்த அணிகளுக்கு தேர்வு இந்த மாதத்திற்குள் முடிந்துவிடும். பின்னர் போட்டிகள் நடைபெறும் இடம் அறிவிக்கப்படும்.
இந்த 8 அணிகளில் வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஒரு அணிக்கு 3 பேர் வீதம் விளையாட உள்ளனர். வெற்றிபெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.1.25 கோடியும், இரண்டாம் பரிசாக ரூ.75 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.50 லட்சம் வழங்க உள்ளோம். இதில், ஏ கிரேடு, பி கிரேடு, சி கிரேடு என வீரர்கள் தரம் பிரிக்கப்பட்டு அடுத்த உலகப் போட்டிகளில் பங்கேற்க வீரர்களை தேர்வு செய்வோம் என்றார்.
கூட்டத்தில் செயலாளர் கங்காதரன், தமிழ்நாடு தலைவர் ராஜரத்தினம் மற்றும் தேனி மாவட்டச் செயலாளர் நாகராஜ், கரூர் மாவட்டச் செயலாளர் ராஜா, தலைவர் எம்.பாலு, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் துர்கீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.