பதினெட்டு வயது நிரம்பிய, தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான த. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் 2019 பணிகள் மேற்கொள்வது தொடர்பாக கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. எனவே வரும் 2019 ஜனவரி 1 ஆம் தேதியில் 18 வயது நிரம்பிய, தகுதியுள்ள அனைவரும் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம் 6 இல் மனுக்கள் அளித்திடலாம்.
வாக்காளர் பட்டியலில் உள்ள முகவரியிலிருந்து குடிபெயர்ந்த, முகவரியில் இல்லாத மற்றும் இறந்துபோனவர்களின் பெயர்களை படிவம் 7 இல் மனுக்கள் அளித்து நீக்கம் செய்திடலாம். வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை திருத்தம் செய்திட படிவம் 8-இல் மனுக்கள் அளித்திடலாம்.
ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் இடம் பெயர்ந்தோரின் முகவரியை மாற்றம் செய்திட படிவம் 8ஏ-இல் தகுந்த ஆவணங்களுடன் வாக்குச்சாவடி மையங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் (அனைத்து வட்டாட்சியர் அலுவலங்கள், கரூர், குளித்தலை நகராட்சி அலுவலகம்) மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் (கரூர், குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ) வரும் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இதுதொடர்பாக வரும் 14 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை)அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் நடைபெறும் சிறப்பு முகாமில் மனுக்கள் அளித்து பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளார்.