நேரத்தை செலவு செய்யும் விதமே வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்றார் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன்.
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், காணியாளம்பட்டி அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான திறன் வளர்ப்பு கருத்தரங்கத்தை சனிக்கிழமை தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது: தூய்மையான வளர்ச்சியை அடைய தொடர்ந்து எடுக்கும் முயற்சிதான் தன்னம்பிக்கை. எதுவும் நினைத்தவுடன் கிடைத்து விடாது. நீங்கள் தேடித்தேடிப் போக வேண்டும். அதற்காக தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நன்றாக படிப்பவர், எழுதுபவர் மற்றும் நினைவாற்றல் கொள்பவர்களுக்கும், நமக்கும் என்ன வித்தியாசம் என்று யோசித்து பார்க்க வேண்டும். ஐந்து புலன்களையும் பயன்படுத்த வேண்டும். தொடர் முயற்சிக்கு கண்டிப்பாக நல்ல பலன் உண்டு. ஒரே விஷயத்தை 4 வழிகளில் செய்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். நேரத்தை செலவு செய்யும் விதமே வாழ்க்கையைத் தீர்மானிக்கும். படிப்பது, ஒப்புவிப்பதற்காக அல்ல, புரிந்து கொள்வதற்காக. ஒருவர் எழுதிய கருத்து மற்றும் கணக்குகளை நாம் படிப்பதற்கோ அல்லது புரிந்து கொள்வதற்கோ சிரமமாக எடுத்துக்கொண்டால் அதை எழுதியவரின் உழைப்பை எண்ணிப்படிக்க வேண்டும். உங்களை நீங்களே செதுக்கிக் கொள்வதற்காக ஏற்படும் வலியை பொறுத்துக்கொள்ள வேண்டும். நினைவாற்றலை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் லியாகத், கல்லூரி முதல்வர் தேன்மொழி, வட்டாட்சியர் கற்பகம், வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.