தற்கொலைகளைத் தடுப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கரூரில் கல்லூரி என்சிசி மாணவர்கள் திங்கள்கிழமை சைக்கிள் பேரணி சென்றனர்.
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கரூர் அரசு கலைக் கல்லூரி 7ஆவது கம்பெனி 2ஆம் தமிழ்நாடு பட்டாலியன் கமாண்டர் லெப்டினன்ட் அ.விநாயகம் தலைமையில் தேசிய மாணவர் படையினர் தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி புறப்பட்டனர். கல்லூரியில் துவங்கிய பேரணியை கல்லூரியின் தேர்வு நெறியாளர் முனைவர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன், பட்டாலியன் கமாண்டர் ஜபீன்மேத்யூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். சணப்பிரட்டி, புலியூர், உப்பிடமங்கலம், சேங்கல், பஞ்சப்பட்டி வழியாக அய்யர்மலை வரை சென்று பின்னர் மீண்டும் கல்லூரியை பேரணி வந்தடைந்தது. சுமார் 120 கி.மீ. தொலைவுக்கு கிராமங்கள் வழியாகச் சென்று தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.