ஈரோடு-திருச்சி ரயில் பெட்டியில் பிரேக் கோளாறு ஏற்பட்டதால் கரூரில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றது.
ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு பயணிகள் ரயில் தினந்தோறும் இயக்கபட்டு வருகிறது. இந்த ரயில் ஈரோட்டில் காலை 7.50க்கு புறப்பட்டு திருச்சிக்கு 11.50க்கு சென்றடையும். திங்கள்கிழமை காலை ஈரோட்டில் இருந்து புறப்பட்டு பயணிகள் ரயில் கரூர் அருகே மூர்த்திபாளையம் என்ற இடத்தில் வந்தபோது ரயில் இன்ஜினுக்கு அடுத்த பெட்டியில் சக்கரத்தில் அதிக சத்தம் கேட்டது. இதையடுத்து மெதுவாக இயக்கிய ஓட்டுநர் ரயிலை, கரூர் ரயில் நிலையத்தில் கொண்டு வந்து நிறுத்தினார்.
ரயில்வே ஊழியர்கள் சோதனையிட்டதில், சக்கரத்தில் பிரேக் பழுதானது தெரியவந்தது. இதையடுத்து ரயில் பிரேக் சீரமைக்கப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக 10.10 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பணிக்குச் செல்வோர் சிரமப்பட்டனர்.