எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட விளக்க கூட்டம்
By DIN | Published on : 12th September 2018 07:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கரூரில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்ட விளக்க கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள க.பரமத்தி அரசுப்பள்ளி மாணவர் அருள்பிரகாசம் ஆசிரியர்கள் திட்டியதாகக் கடிதம் எழுதிவைத்து விட்டு கடந்த ஜூலை 30-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.
இதுதொடர்பான புகாரின்பேரில் க.பரமத்தி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து தமிழ்நாடு தலித் விடுதலை இயக்கம் சார்பில் கண்டன விளக்கக்கூட்டம் கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாநில பொதுச் செயலாளர் ச. கருப்பையா தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலர் நிசோக் ராஜா , மாவட்டச் செயலர் சக்திபரதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தை இந்திய குடியரசு கட்சியின்(அத்வாலே) மாநில ஒருங்கிணைப்பாளர் தலித்பாண்டியன் தொடக்கி வைத்து பேசினார்.
இணைப்பொதுச் செயலர் சசிகுமார், தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் தயாளன், திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் க. பரமத்தி காவல்நிலையத்துக்குட்பட்ட க. பரமத்தியைச் சேர்ந்த பள்ளி மாணவர் அருள்பிரகாசம் தற்கொலைக்கு காரணமானோரை உடனடியாக கைது செய்ய வேண்டும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முறையான இழப்பீட்டு நிவாரணம், அரசுவேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தலித் விடுதலை இயக்கத்தினர் திரளாக பங்கேற்றனர்.