கரூரில் காவல்நிலையம் முன் இளைஞர் செவ்வாய்க்கிழமை இரவு பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
கரூர் அண்ணாநகர் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் கோபிநாத் (24). இவர் கரூரில் உள்ள இருசக்கர வாகன பழுதுநீக்கும் கடையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவரும் எல்ஜிபி நகரைச் சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். வெவ்வெறு சமூகத்தினர் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த 9-ம் தேதி தனது காதலியை திருச்சி உறையூருக்கு அழைத்துச் சென்று அங்குள்ள கோயிலில் திருமணம் செய்தார்.
தகவலறிந்த பெண் வீட்டார் சம்பவ இடத்திற்குச் சென்று இருவரையும் சேர்த்து வைப்பதாகக் கூறி கரூருக்கு அழைத்து வந்து, பின்னர் செவ்வாய்க்கிழமை காலை கரூர் நகர காவல் நிலையத்திற்கு வரச் செய்து திருமணம் செய்த ஜோடிகளை பிரித்தனராம்.
இதனால் விரக்தியடைந்த கோபிநாத் இரவு 9 மணியளவில் பிளேடால் தனது கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் அறுத்துக் கொண்டார். இதனால் அவர் லேசான காயமடைந்தார். அவரை உறவினர்கள் தடுத்து கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக கரூர் நகர காவல் நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர்.