தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு வரும் 14-ம் தேதி கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழ்வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ப. அன்புச்செழியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் நிகழாண்டு ( 2018-19) கல்லூரி மாணவர்களுக்கு நடைபெறும் போட்டிகள் வரும் 14-ம் தேதி தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரிக் கலையரங்கில் நடைபெறுகிறது. கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி தலைப்புகள் சென்னை தமிழ்வளர்ச்சி இயக்குநரிடமிருந்து அனுப்பப்படும். நடுவர்கள் முன்னிலையில் முத்திரையிடப்பட்ட உறைகள் உடைக்கப்பட்டு போட்டித் தலைப்புகள் அறிவிக்கப்படும். போட்டிகளை நடத்துவதற்கு தமிழ்ப்பேராசிரியர்கள் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளனர். போட்டிகள் முடிவுற்ற பின்னர் உடனடியாக வென்றோர் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ. 7,000, மூன்றாம் பரிசு ரூ.5000 பரிசு வழங்கப்படும்.