தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் கரூரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன .
கரூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற போட்டிகளை கல்லூரி முதல்வர் ஜோதிவெங்கடேஸ்வரன் தொடக்கி வைத்தார். தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் முனைவர் ப. அன்புச்செழியன் முன்னிலை வகித்தார். தமிழ்த் துறைத் தலைவர் மாரியம்மாள், உதவிப் பேராசிரியர் ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கல்லூரி மாணவர்களின் பேச்சுத்திறன், படைப்புத் திறனை வெளிக்கொணரும் வகையில் நடைபெற்ற போட்டிகளில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 கல்லூரிகளில் இருந்து 50 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கான தலைப்புகள் போட்டி துவங்கும் முன் நடுவர்கள் முன்னிலையில் முத்திரையிடப்பட்ட உறைகள் உடைக்கப்பட்டு மாணவ, மாணவிகளிடம் வழங்கப்பட்டது. போட்டிகளை நடத்த தமிழ்ப்பேராசிரியர்கள் நடுவராக நியமிக்கப்பட்டிருந்தனர். போட்டிகள் முடிவுற்ற பின்னர் உடனடியாக வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டு முதல் பரிசாக, ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ. 7000, மூன்றாம் பரிசாக ரூ. 5000 வழங்கப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.