கரூரில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்ற இந்து முன்னணியினர் வாங்கல் காவிரி ஆற்றில் கரைத்தனர்.
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் இந்துமுன்னணி, பாஜக, விவேகானந்தர், காமராஜர் நற்பணி மன்றத்தின் மற்றும் பொதுமக்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் சார்பில் மொத்தம் 302 இடங்களில் வியாழக்கிழமை சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும் விநாயகருக்கு கொளுக்கட்டை, சுண்டல் படைத்தும் வழிபட்டனர்.
இதையடுத்து கரூர் நகர்ப் பகுதிகள், தாந்தோணிமலை, பசுபதிபாளையம், வெங்கமேடு பகுதியில் இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த 39 சிலைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து மேள தாளம் முழங்க கரூர் 80 அடி சாலைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து வாங்கல் காவிரி ஆற்றில் கரைக்க ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை ஆர்எஸ்எஸ்சின் சிவக்குமார் தொடக்கி வைத்தார். ஊர்வலமானது கரூர் கோவை சாலை, ஜவஹர் பஜார், ஐந்துரோடு, அரசு காலனி வழியாக வாங்கலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்குள்ள காவிரி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது. இதில் பல்வேறு இந்து அமைப்பினர் திரளாக பங்கேற்றனர்.