வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் கட்டட விரிவாக்கப் பணிக்கு புகழூர் வட்டார பொது நலக்குழு சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை ஆட்சியரிடம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
புகழூர் வட்டார பொது நலக்குழுவினர் சார்பில் பல்வேறு சமுதாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்குழு சார்பில் 1999ஆம் ஆண்டு ரூ.7 லட்சம் மதிப்பிலான நிலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வாங்கி கொடுக்கப்பட்டது.
தற்போது மருத்துவமனையில் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் ரூ.15.25 லட்சம் மதிப்பில் புறநோயாளிகள் பிரிவு கட்டட விரிவாக்கம் செய்யும் பணிக்கு இக்குழு சார்பில் பொதுமக்களின் பங்குத் தொகையாக ரூ.5,09,898க்கான வங்கி கேட்பு வரைவோலையை ஆட்சியர் த.அன்பழகனை நேரில் சந்தித்து வழங்கினர்.
மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் மு.விஜயகுமார், புகழூர் வட்டார பொது நலக்குழு சார்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கு.வடிவேல், டி.என்.சிவசுப்ரமணியன், முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் நாச்சிமுத்து, முன்னாள் புஞ்சை புகழூர் பேரூராட்சித் தலைவர் எஸ்.எஸ்.முனுசாமி, வழக்குரைஞர் வே.ரா.சிதம்பரம், என்.எம்.குழந்தைசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.