அதிமுக வேட்பாளர் தம்பிதுரை பொய் பிரசாரம் செய்து வருகிறார் என்றார் அமமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி. தினகரன்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் அமமுக சார்பில் கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பிஎஸ்என். தங்கவேலுக்கு புதன்கிழமை இரவு வாக்கு கேட்டு வந்த அவர் பேசுகையில், நடைபெறப்போகும் 18 பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 8 தொகுதியில் வெற்றி பெறவில்லையென்றால் இந்த ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என்பது மக்களுக்கு தெரியும். அரவக்குறிச்சி தேர்தலைப் போல இது ஆட்சி மாற்றத்துக்கான தேர்தலாக இருக்கும். அதிமுக, மோடியுடன் கைகோத்துக்கொண்டதால் சிறுபான்மையினர் வாக்குகளை இழந்துவிட்டது. அதிமுக வேட்பாளர் தம்பிதுரை பொய் பிரசாரம் செய்து வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்த நீங்கள்தான் இந்தியாவை ஆளப்போகும் பிரதமரை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்றார் அவர்.