கரூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக, திமுக கட்சியினர் ஆன்லைனில் இறுதிக்கட்ட பிரசார அனுமதி கோரியதில், ஏற்பட்ட குளறுபடியால் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இரு கட்சியினரும் பிரசாரம் செய்ய உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்டு நேரம் ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக , அமமுக உள்ளிட்ட வேட்பாளர்கள் தீவிர களப்பணியாற்றி தங்களது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், கரூரில் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையிலும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் பிற்பகல் 4 மணி முதல் 6 மணி வரையிலும் இறுதிக்கட்ட பிரசாரம் செய்ய ஆன்லைனில் அனுமதி கேட்டிருந்தனராம். ஆன்லைனில் விண்ணப்பத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளால் அதிமுகவுக்கு பிற்பகல் 2-5 மணிக்கும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு 4-6 எனவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இதனிடையே தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமாகிய த.அன்பழகன், நீதிமன்றத்தில் இதுதொடர்பாக முறையிட்டுள்ளதாகவும், நீதிமன்றம் அறிவிக்கும் நேரம் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சியினருக்கும் ஒதுக்கப்படும் என அவர் கூறியதாகவும் கூறப்படுகிறது.