வரும் 18 ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தல் மூலம் தமிழகத்தை மாற்றுவதற்கான - புது விவசாயத்திற்கான விதையை வாக்காளர்களாகிய நீங்கள் நடவேண்டும் என்றார் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன்.
கரூர் மக்களவைத் தொகுதியின் மக்கள் நீதிமய்ய வேட்பாளர் மருத்துவர் ஹரிஹரனுக்கு ஆதரவாக கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் திங்கள்கிழமை மாலை வாக்குசேகரித்து மேலும் அவர் பேசியது:
மற்ற கட்சிகளில் வேட்பாளர்களை பேசவிட மாட்டார்கள். காவலுக்காக நிறுத்தி வைத்திருப்பார்கள். ஆனால் நமது வேட்பாளர் தொடர்ந்து உங்களிடம் பேச வேண்டும். உரையாட வேண்டும். மக்கள் பிரச்னைகளை கேட்டு தில்லியில் பேச வேண்டும்.
கரூர் தமிழகத்தை வழிநடத்த வேண்டும். நேர்மையான மாற்று அரசியல் கொடுப்பதற்கான செயலை தமிழகம் துவங்கிவிட்டது என்பதற்கான சாயல்தான் இங்கே கூடியிருக்கும் நல்லவர்கள். காசு வாங்காமல் இந்த வெயிலில் கூடியிருக்கிறீர்கள். மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் இவர்கள், என்னைப்போலவே நேர்மையானவர்கள்.
நீங்கள் எதிர்பார்க்கும் நேர்மை, உங்களுள் வைத்திருக்கும் அந்த நேர்மையை பிரதிபலிக்க வேண்டும். வரும் 18 ஆம் தேதி தமிழகத்தை மாற்றுவதற்கான புதுவிவசாயத்திற்கான விதையை நீங்கள் நடவேண்டும். இது நல்ல வாய்ப்பு.
இந்த தேசம் முன்னேற வேண்டும் என்றால் மாகாணங்கள், மாவட்டங்கள், மாநிலங்கள், சுயாட்சியாக இயங்க வேண்டும். இந்த தேசத்தை தறிகெட்டுப்போவகச் செய்வதற்கு மத்தியிலேயே 1980-இல் துவங்கிய இந்த ஆபத்து, இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
அதற்கு எதிர் விஸ்வரூபமாக மக்கள் நிற்கவேண்டும். சர்வாதிகாரத்தை என்றும் இந்தியா ஏற்காது என்பதற்கு முன்னோடியாக தமிழகம் திகழ வேண்டும் என்றார்.
பிரசாரத்தில் வேட்பாளர் மருத்துவர் ஹரிஹரன், சுயாட்சி இந்தியா கட்சியின் மாநில நிர்வாகி கிறிஸ்டின், மக்கள் நீதிமய்யத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள், சுயாட்சி இந்தியா கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.