குளம் ஆக்கிரமிப்புக்கு எதிராக வழக்கு தொடுத்த தந்தை, மகன் இருவரையும் வெட்டிக் கொலை செய்த வழக்கில் நீதிமன்றத்தில் சரணடையவந்து தப்பியோடிய முக்கிய குற்றவாளி ஜெயகாந்தனை தனிப்படை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குளித்தலை அடுத்த முதலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை(65), அவரது மகன் நல்லதம்பி(45) ஆகிய இருவரையும் அதேபகுதியைச் சேர்ந்த ஜெயகாந்தன் தலைமையிலான கூலிப்படையினர் கடந்த 29 ஆம் தேதி வெட்டிக் கொலை செய்தனர். இந்நிலையில், கூலிப்படைத் தலைவன் ஜெயகாந்தன் புதன்கிழமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சரணடையச் சென்றார். ஆனால் போதிய சான்றிதழ் இல்லை என நீதிமன்ற ஊழியர்கள் கூறியதால் அவர் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் மாயமாகிவிட்டார். இதைத்தொடர்ந்து, குளித்தலை காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் சனிக்கிழமை தலைமறைவாக இருந்த ஜெயகாந்தனைக் கைது செய்து குளித்தலை நீதிமன்றத்தில் நீதிபதி பாக்யராஜ் முன் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிபதி, ஜெயகாந்தனை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, போலீஸார் ஜெயகாந்தனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.