புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து கரூரில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் வட்டாட்சியரகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலித் விடுதலை இயக்க மாநில துணைத் தலைவர் தலித் ராசகோபால் தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் சுந்தரம், மகளிரணி செயலர் சாந்திபழனிசாமி, அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, இளைஞரணி செயலர் நிசோக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை சமூக நீதிக் கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் இரா. அண்ணாதுரை தொடக்கி வைத்தார். தமிழக கல்வியாராய்ச்சி வளர்ச்சி நிறுவன செயல் இயக்குநர் ஜி. முருகையா விளக்க உரையாற்றினார்.
இதில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சின்னசாமி, தலித் விடுதலை இயக்க மாநில இணைப் பொதுச் செயலர் சசிக்குமார், ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலர் இரா. முல்லையரசு, மதிமுக மாவட்டச் செயலர் கபினிசிதம்பரம், இந்திய கம்யூ. மாவட்டச் செயலர் ரத்தினம் உள்ளிட்டோர் பேசினர்.
தலித் விடுதலை இயக்க மாநில பொதுச் செயலர் ச. கருப்பையா, புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சமூகநீதி கழகம் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.