வேளாண் பணி மேற்கொள்ள அழைப்பு

மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரூர் மாவட்ட  விவசாயிகள் வேளாண் பணிகள் மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரூர் மாவட்ட  விவசாயிகள் வேளாண் பணிகள் மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிகழாண்டில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணையில் நெல் சாகுபடிக்கென செவ்வாய்க்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  
கரூர் மாவட்டத்தில், நடப்பாண்டு 13,300 ஹெக்டேரில் நெல் சாகுபடி பரப்பு எதிர்பார்க்கப்படுகிறது.  இதைக் கருத்தில் கொண்டு நெல் சாகுபடி மேற்கொள்ள ஆயத்தப்பணிகளான நிலம், இடுபொருட்கள் தயார் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் தேவையான விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நடப்பு சம்பா பருவத்துக்குத் தேவையான பி.பி.டி 5204, டி.கே.எம்.13, கோ (ஆர்) 50 மற்றும் குறுகியகால ரகங்களான கோ-51 என மாவட்டத்தில் மொத்தம் 121 மெட்ரிக் டன் நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.  தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பத்தாண்டுக்கு மேல் வெளியிடப்பட்ட ரகங்களுக்கு கிலோவிற்கு ரூ. 10, பத்தாண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட ரகங்களுக்கு கிலோவிற்கு ரூ. 20 அல்லது 50 சதவிகிதம் மானிய விலையில்  நெல் ரகங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.  விதை கிராமத் திட்டத்தின் கீழ் கிலோவிற்கு ரூ.17 அல்லது 50 சதவிகிதம் மானிய விலையில் விதை நெல் விநியோகம் செய்யப்படுகிறது.
சிறுதானிய விதைகள் சோளம் மற்றும் குதிரைவாலி விதைகள் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் கிலோவிற்கு 30 வீதம் மானிய விலையில் விநியோகிக்கப்படுகிறது. பயறுவகைப் பயிர்களில் நடப்பு பருவத்திற்கு ஏற்ற துவரை, உளுந்து மற்றும் கொள்ளு விதைகள் இருப்பு வைக்கப்பட்டு, துவரை கிலோவிற்கு ரூ. 54 மற்றும் உளுந்து ரூ. 48 வீதம் மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. எண்ணெய் வித்து பயிர்களில் நிலக்கடலை விதைகள், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கிலோவுக்கு ரூ.36 மானியத்தில்  விநியோகிக்கப்படுகிறது. வேளாண்மையில் இரட்டிப்பு மகசூல் பெற்றிடவும், மும்மடங்கு வருமானம் பெருக்கிடவும் மேற்காணும் வேளாண் திட்டங்கள் மூலம் பயனடைய வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com